தமிழகத்தைச் சேர்ந்த வி.எஸ். சம்பத் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமனம்
இந்திய தேர்தல் ஆணையமானது 3 உறுப்பினர்களை கொண்ட அமைப்பு ஆகும். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் எஸ்.ஒய்.குரேஷியும், இரு தேர்தல் ஆணையர்களாக வி.எஸ்.சம்பத்தும். எச்.எஸ்.பிரம்மாவும் இருந்து வருகின்றனர். எஸ்.ஒய்.குரேஷியின் பதவிக்காலம் வருகிற 10-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து மூத்த தேர்தல் ஆணையரான வி.எஸ்.சம்பத்தை புதிய தலைமை தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்து உள்ளது.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு இருக்கும் வி.எஸ்.சம்பத் 1950-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி வேலூரில் பிறந்தார். 1973-ம் ஆண்டின் ஆந்திர பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன் மத்திய மின்துறை செயலாளராக பணியாற்றினார். ஆந்திர மாநிலத்திலும், டெல்லியிலும் மேலும் சில முக்கிய பதவிகளையும் வகித்து உள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை ஆகும். இதில் எது முதலில் நிறைவடைகிறதோ அதுவரை அவர்கள் அந்த பதவியில் இருக்கலாம். வி.எஸ்.சம்பத்துக்கு 2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் 65 பூர்த்தியாகும் என்பதால், அதுவரை அவர் தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் இருப்பார். வருகிற 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இவரது தலைமையில்தான் நடைபெறும்.
நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் போன்ற முக்கிய பதவிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி ஆகியோரை உள்ளடக்கிய குழு மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று அண்மையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் அவரது யோசனையை ஏற்கெனவே மத்திய அரசு நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.