அதிமுகவில் இணைந்த தேமுதிக மகளிர் அணி செயலாளர் ரெஜினா பாப்பா!
கடந்த முறை மத்தியில், பாஜக ஆட்சியின் போது புதுக்கோட்டை தொகுதி அதிமுக பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ராஜா பரமசிவம். அப்போது, பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட பின்பு அவர் பதவியை இழந்தார்.
பின்பு, 2006 சட்ட மன்ற தேர்தலில் ஆலங்குடியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால், அதிமுக தலைமை அதற்கு மறுத்த விட்டது. இதனால் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனையடுத்து, அவர் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில் முத்தரையர் நிறைந்திருக்கும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கேட்டு திமுக தலைமையிடம் வலியுறுத்தி வந்தார். ஆனால் திமுக தேர்தல் புறக்கணிப்பு செய்துவிட்டது.
இந்த நிலையில் , ராஜா பரமசிவம், சென்னையில் போயஸ் தோட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளார் ஜெயலலிதாவை சந்தித்து சால்வை அணிவித்து அதிமுகவில் இணைந்தார்.
இவருடன், முத்தரையர் சங்கத்தின் மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குல.செல்லையா ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.
இதே போல, சிவகங்கை தேமுதிக முன்னாள் பாராளுமன்ற வேட்பாளரான ரெஜினா பாப்பா -வும் அதிமுகவில் இணைந்தார். இவர் பேராசிரியை ஆவார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். தேமுதிக மகளிர் அணி செயலாளராக இருந்தவர்.