தலைமை தேர்தல் ஆணையராக இன்று பதவியேற்ற வி.எஸ். சம்பத்
டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக வி.எஸ். சம்பத் இன்று பதவியேற்றார்.
இந்திய தேர்தல் ஆணயத்தில் 3 பேர் இருப்பார்கள். இதில் 2 பேர் தேர்தல் ஆணையராகவும் ஒருவர் தலைமை தேர்தல் ஆணையராகவும் இருப்பார்கள். தேர்தல் சம்பந்தமாகவோ அல்லது வாக்காளர்கள் சம்பந்தமாகவோ தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு ஆணையர்களும் இணைந்தே எந்த ஒரு முடிவையும் எடுப்பார்கள். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுமேயானால் தலைமை தேர்தல் ஆணையர் எடுக்கும் முடிவு தான் இறுதியானதாகும்.
இதன் செயல்பாட்டில் மத்திய அரசோ அல்லது மாநில அரசோ தலையிட முடியாது. அது சுயாட்சி அதிகாரம் படைத்தது ஆகும். தலைமை தேர்தல் ஆணைய தலைவரை மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் நியமிப்பார். தலைமை தேர்தல் ஆணையராக இருந்த எஸ்.ஒய். குரேஷி நேற்று ஓய்வு பெற்றார். நேற்று டெல்லியில் நடந்த விழாவில் அவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக வீரவள்ளி சுந்தரம் சம்பத் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவர் வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்த பதவியில் நீடிப்பார்.
தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சம்பத் கடந்த 1973 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். அவர் ஆந்திர அரசு மற்றும் மத்திய அரசு துறைகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு சம்பத் தேர்தல் ஆணையராக நிமயமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications