முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா சிலையை அகற்ற இலங்கை அரசு தீவிரம்
கொழும்பு: முன்னாள் இலங்கை பிரதமர் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் சிலையை அகற்ற இலங்கை அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது.
இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா. பண்டாரநாயக்கா ஓர் கிறிஸ்தவராகப் பிறந்த போதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டிக் கொண்டார். இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட இரத்வத்தை பரம்பரையைச் சேர்ந்த சிறிமாவோவை திருமணம் செய்து கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் 1931 முதல் 1951ம் ஆண்டு வரை இருந்த அவர் பல்வேறு பதவிகளை வகித்தார்.1951ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங்கை சுதந்திரக் கட்சியினைத் துவக்கி மக்கள் செல்வாக்கை பெற்றார். 1956ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.
இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த ஆங்கிலத்துக்கு பதிலாக சிங்கள மொழியை இலங்கையி்ன் அதிகாரப்பூர்வ மொழியாக்கினார். இந்த நிலையில் தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அங்கு வந்த பௌத்த பிக்கு ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
கொழும்பு காலிமுகத்திடலில் முன்னாள் பிரதமர் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் திருஉருவச் சிலை உள்ளது. இங்கு ஹாங்காங்கை தலைமையைகமாக கொண்ட சங்ரிலா ஹோட்டல் நிர்மாண பணி நடைபெற்று வருகின்றது. இப்பணிகளுக்காக பண்டாரநாயக்காவின் திருஉருவச் சிலையை அகற்றுவதற்கான நில அளவை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு இலங்கையில் உள்ள அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்னர்.












Click it and Unblock the Notifications