ராம்தேவ் ஸ்டைலில் பெண் வேடத்தில் ஊர் ஊராகப் போகிறாரா நித்தியானந்தா?
மதுரை:கர்நாடக போலீஸாரின் பிடியில் சிக்காமல் தப்பி ஓடி வரும் நித்தியானந்தா, பெண் வேடத்தில் அதாவது சுடிதார் அணிந்து தப்பி வருவதாக ஒரு தகவல் கூறுகிறது.
மேலும் அவர் சுடிதார் உடையில், மதுரை ஆதீன மடத்திற்கு நள்ளிரவில் வந்ததாகவும் ஒரு தகவல் உள்ளது. இதுகுறித்து மதுரை உளவுத்துறை போலீஸாருக்கும் தகவல் கிடைத்துள்ளதாம். மேலிட உத்தரவுக்காக அவர்கள் காத்துள்ளனராம். மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தா இருப்பது உறுதியானால், மேலிடம் பச்சைக் கொடி காட்டினால், அவரை கர்நாடக போலீஸாரிடம் பிடித்துத் தர மதுரை போலீஸார் ஆயத்தமாக இருப்பதாக தெரிகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மதுரை ஆதீன மடத்திலிருந்து ஒரு கார் நள்ளிரவுக்கு மேல் புறப்பட்டுச் சென்றுள்ளது. சமயநல்லூர் அருகே புறவழிச் சாலையில், அந்தக் காரில் ஒரு சுடிதார் போட்ட பெண் ஏறினாராம். அந்தப் பெண்ணை அதிகாலையில் மதுரை ஆதீன மடத்திற்கு பின் கேட் வழியாக கூட்டி வந்துள்ளனர்.
பிறகு அவர் உள்ளே சென்றார்.மதுரை ஆதீனத்தின் அறைக்கு அவர் போயுள்ளார். அவர் வேறு யாருமல்ல, நித்தியானந்தாதான் என்று கூறுகிறார்கள். பெண் வேடமிட்டு அவர் தப்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.
சேதுபதி தங்கிய பாதாள அறையில்...?
மேலும் தற்போது நித்தியானந்தாவை மன்னர் சேதுபதி தங்கிய ரகசிய பாதாள அறையில் ஆதீனம் தங்க வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ஆதீனம் மட்டுமே அந்த அறைக்குப் போகிறாராம்,வருகிறாராம். வேறு யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லையாம்.
இன்னும் எத்தனை காலத்துக்கு மதுரை ஆதீன மடத்திற்கு இந்த சோதனையோ என்று அதன் பக்தர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.