புதுக்கோட்டையிலாவது தேமுதிக திராணியை நிரூபிக்குமா?
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தல் இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலிலாவது தேமுதிக திராணியை நிரூபிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திராணி இருந்தால் போட்டியிட்டு வென்று பாருங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் கூறியபோது ஆரம்பித்தது இந்த திராணி விவகாரம். இதையடுத்து கேப்டன் விஜயகாந்துக்கு திராணியார் என்ற பட்டமே வந்துவிட்டது. அவரும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளரை நிருத்தி தீவிர பிரச்சாரம் செய்தும் அதிமுக அமோக வெற்றி பெற்றது.
இதையடுத்து புதுக்கோட்டை இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலிலும் சங்கரன்கோவிலைப் போன்று அதிமுக வாக்களர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து வெற்றி பெறும் என்று கூறி திமுக உள்ளிட்ட சில கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் தேமுதிக இந்த தேர்தலிலாவது திராணியை நிரூபித்துவிட வேண்டும் என்று போட்டியிட்டுள்ளது.
சங்கரன்கோவில் பிரச்சாரத்தில் விஜயகாந்தை விவசாயி ஒருவர் வம்பிழுக்க அவர் கடுப்பானார். ஆனால் புதுக்கோட்டையில் ஒரு சிறுவன் அவரைப் பார்த்து சபாஷ் என்று சொல்லியிருக்கிறான். விலை உயர்வை மையமாக வைத்து பிரச்சாரம் செய்த விஜயகாந்த் வார்த்தைக்கு மக்கள் எவ்வளவு மதிப்பு கொடுத்துள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு புதுக்கோட்டையில் இடைத்தேர்தல் துவங்கி நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications