நித்தியானந்தா சிக்கும்போது அதை 'ஷூட்' செய்வோம்-பெங்களூர் போலீஸ்
தனது இறை வாழ்க்கையில் 2வது முறையாக தலைமறைவாகியுள்ளார் நித்தியானந்தா. இதற்கு முன்பு நடிகையுடன் அந்தரங்க கோலத்தில் இருப்பது போன்ற வீடியோ வெளியானபோது அவர் தலைமறைவானார். ஒரு மாத தேடலுக்குப் பின்னர் அவர் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து கர்நாடக சிஐடி போலீஸாரிடம் சிக்கி கைதானார்.
சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் நித்தியானந்தா. கடந்த 7ம் தேதி அவரது பிடதி ஆசிரமத்தில் வைத்து கன்னட டிவி செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டார். இது பெரும் ரகளையாகி விட்டது.
போலீஸார் நித்தியானந்தா உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.இதையடுத்து நித்தியானந்தா தப்பிதலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை.
அவரைக் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகத்திற்கும், ஆந்திராவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அவரை எங்கிருந்தாலும் பிடித்துக் கொண்டுவருவோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெங்களூர் கூடுதல் துணை கமிஷனர் அர்ச்சனா கூறுகையில், நித்தியானந்தா நிச்சயம் கைது செய்யப்படுவார். அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்குச் செல்லவுள்ளனர்.
கடந்த 2010ம் ஆண்டு அவர் ஆபாச வீடியோவில் தோன்றியது தொடர்பான புகார்களின் பேரில்கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். ஜாமீ்னில் வெளியேவந்த ஒருவர் தலைமறைவாவது சட்டப்படி குற்றமாகும். எனவே அந்த ஒரு காரணத்திற்காகவே நித்தியானந்தாவை கைது செய்ய முடியும்.
இந்த முறை எங்கு வைத்து நித்தியானந்தாவைப் பிடிக்கிறோமோ அங்கு வீடியோவில் அது பதிவு செய்யப்படும் என்றார் அர்ச்சனா.
இன்றும் பிடதியில் போலீஸ் சோதனை
இதற்கிடையே, பிடதி ஆசிரமத்தில் இன்று 2வது நாளாக கர்நாடக போலீஸார் சோதனை நடத்தினர்.