ஆத்தாடி மீண்டும் மின்வெட்டா? அலறும் பொது மக்கள்
தமிழகத்தில் நீர் மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி குறைந்துவிட்டதால் மின்சார வினியோகம் குறைந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதை பொது மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தாலும் மின் தடையை அமல்படுத்துவதில் காட்டப்படும் பாரபட்சம் மக்களை கடும் அதிருப்தியடையச் செய்துள்ளது. இயற்கையாக வெயில் அதிகமாக உள்ள திருச்சி, கரூர், வேலூர், சேலம் போன்ற மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவதால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். கோவை, திருப்பூர் போன்ற தொழில் மாவட்டங்களில் மின்தடையால் தொழில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தஞ்சை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு மணி நேரம் கூட மின் வினியோகம் இருப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து சமுக சேவகர் ஒருவர் நம்மிடம் கூறுகையில்,
கடந்த 10 நாட்களுக்கு முன்பு மின் வினியோகம் ஓரளவு சீராக இருந்தது. இதனால் நாங்கள் அவசரப்பட்டு பேட்டரி, இன்வெர்ட்டர் வாங்கிவிட்டோமோ என்று வருத்தப்பட்டோம். பல ஆயிரம் ரூபாய் தேவையில்லாமல் செலவு செய்துவிட்டோமோ என கலங்கினோம்.
ஆனால் தற்போது மீண்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 6 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின் தடை ஏற்படுகின்றது. இதற்கு காரணமாக புதுக்கோட்டை இடைத் தேர்தலை சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். புதுக்கோட்டையில் இடைத் தேர்தலை முன்னிட்டு அங்கு சீராக மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும். அப்போது தான் அங்குள்ள மக்கள் ஆளும் கட்சிக்கு ஓட்டு போடுவார்கள். அதனால் புதுக்கோட்டைக்கு மின் தடை இல்லாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்கின்றனர்.
ஆனால் அருகில் உள்ள திருச்சி, கரூர், சிவகங்கை, மதுரை போன்ற பல மாவட்டங்களில் மீண்டும் மின்தடையை ஏற்படுத்தியுள்ளனர் என்றார்.