கலாம்தான் எங்கள் வேட்பாளர், முடிஞ்சா பிரணாப்பை இறக்கிப் பாருங்கள்: மமதா சவால்
மமதா பானர்ஜியின் இந்த அறிவிப்பால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பெரும் பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸுடன் நேரடி மோதலுக்கும் மமதா தயாராகி விட்டதை இது காட்டுகிறது.
மூன்றாவது முறையாக முலாயம் சிங் யாதவை சந்தித்துப் பேசினார் மமதா பானர்ஜி. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அப்துல் கலாம்தான் எனது மற்றும் முலாயம் சிங் யாதவின் ஒரே சாய்ஸ், ஒரே வேட்பாளர். அவரை பாஜக வேட்பாளர் என்றோ, நவீன் பட்நாயக்கின் சாய்ஸ் என்றோ, எனது சாய்ஸ் என்றோ கூறாதீர்கள். அப்துல் கலாம்தான் சிறந்தவர், அருமையானவர். இதில் மாற்றம் இல்லை.
மன்மோகன் சிங்கும் அதேபோல நல்லவர்தான், நல்ல சாய்ஸ்தான். அவரை வேட்பாளராக்க காங்கிரஸ் முன்வந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்போம். ஆனால் அவரை போட்டியில் களம் இறக்க அவரது கட்சி மறுக்கும்போது நாங்கள் என்ன செய்ய முடியும்.
எனவே கலாம் மட்டுமே எங்களது ஒரே வேட்பாளர். நாட்டின் உயர் பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்கு அவர் மட்டுமே தகுதியானவர், ஏற்கனவே அந்தப் பதவிக்கு கெளரவம் தேடிக் கொடுத்தவர் கலாம். கலாம் பெயரை அனைவரும் ஒருமனதாக முன்மொழிய முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கலாமை காங்கிரஸ் ஏற்க முன்வராவிட்டால் எனக்குக் கவலை இல்லை. எனது கட்சியின் முடிவு இதுதான், இதை நான் இப்போது தெளிவுபடுத்தியுள்ளேன்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்
இன்று நடைபெறும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள மாட்டேன். நானாக கூட்டணியிலிருந்து விலகவும் மாட்டேன். ஆட்சியைக் கவிழ்க்கவும் முயல மாட்டேன். ஆனால் காங்கிரஸுக்குத் தைரியம் இருந்தால் என்னை நீக்கிக் கொள்ளட்டும்.
நான் கூட்டணியிலிருந்து இதுவரை விலகவில்லை, அப்படி ஒரு எண்ணமும் இல்லை. ஆனால் நான் வேண்டாம் என்று அவர்கள் விரும்பினால் தாராளமாக அதைச் செய்து கொள்ளட்டும். எல்லாம் காங்கிரஸ் கைக்கே விட்டு விடுகிறேன்.
எங்களது மூன்று வேட்பாளர்களையும் காங்கிரஸ் நிராகரித்தது குறித்து நான் கவலைப்படவில்லை. அதை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திப்பேன். நாங்கள் யாரையும் மிரட்ட விரும்பவில்லை. அதை சமயம் எங்களை யாராவது மிரட்டினால் அதை உரிய முறையில் சந்திப்போம்.
இது பஞ்சாயத்து தலைவர் தேர்தலோ அல்லது கிராம சபை தேர்தலோ அல்லது சட்டசபை, லோக்சபா தேர்தலோ அல்ல. நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல். இதற்கு உரியவர் மட்டுமே வேட்பாளராக வேண்டும். எப்படிப் பார்த்தாலும் கலாமுக்கு நிகரானவர் யாரும் இங்கு இல்லை.
கலாமை இப்போது மட்டும் நாங்கள் ஆதரிக்கவில்லை. 2002ம் ஆண்டு அவரது பெயரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிப்பதற்கு முன்பே நானும், முலாயம் சிங் யாதவும் கலாமுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தோம் என்றார் மமதா பானர்ஜி.
இதற்கிடையே மம்தாவைச் சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து முயற்சிகளைச் செய்து வருகின்றனர். தொலைபேசி மூலமும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் மூலமும் அவர்கள் மம்தாவை அணுகவும் அவர் மனதை மாற்றவும் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
அதே நேரத்தில் மம்தா பானர்ஜி விரைவிலேயே காங்கிரஸ் கூட்டணிக்கு முழுக்குப் போடுவார் என்றும் கூறப்படுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் முலாயம் கட்சியை மத்தியக் கூட்டணியில் சேர்த்து அமைச்சர் பதவிகள் தரவும் காங்கிரஸ் தயாராகி வருகிறது.