பொதுக்கழிப்பிடமாகிப் போன ஜீவாவின் கல்லறை: கண்டுகொள்வார்களா கம்யூனிஸ்ட்கள்?
சென்னை: கம்யூனிசத்தின் உயிர்துடிப்பான ஜீவாவின் கல்லறை பொதுக்கழிப்பிடமாக மாறிவருகிறது என்பது வேதனை அளிப்பதாக உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஜீவன் காமராஜர் என்றால், கம்யூனிசத்தின் உயிர்துடிப்பு ஜீவா. அவர் மறைந்தாலும் மக்கள் அவரை மறக்காமல் தங்கள் பிள்ளைகளுக்கு அவரது பெயரை சூட்டி மகிழ்கிறார்கள். எளிமைக்கு பெயர் போனவர் ஜீவா. பெரிய தலைவராக இருந்தபோதிலும் மாற்று வேட்டி, சட்டை கூட இல்லாமல் இருந்துள்ளார். காமராஜர் முதல்வராக இருந்தபோது அரசு விழா ஒன்றுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். போகிற வழியில் தனது நண்பர் ஜீவாவையும் அழைத்துச் செல்ல அவரது வீட்டுக்கு சென்றார்.
அங்கு ஜீவா ஒரு துண்டுடன் நின்று கொண்டிருந்தார். உடனே காமராஜர் சீக்கிரம் உடை மாற்றிவிட்டு வாருங்கள் விழாவுக்கு போகலாம் என்றார். அதற்கு ஜீவா என்னிடம் இருக்கும் ஒரே கதர் வேட்டி, சட்டையை இப்போது தான் துவைத்து காயப்போட்டேன் என்றார். உடனே காமராஜர் ஒரு ஆளை அனுப்பி தாம்பரம் காதி வஸ்திராலயத்தில் இருந்து தனது நண்பனுக்கு வேட்டி, சட்டை வாங்கி வரச் சொல்லி கொடுத்தார். அதன் பிறகு ஜீவாவை விழாவுக்கு அழைத்துச் சென்றார்.
அவ்வளவு எளிமையான ஜீவாவின் பிறந்தநாள் நூற்றாண்டு கல்லறை காசிமேடு இந்து மயானத்தின் அருகே உள்ளது. சாலையோர நடைபாதை அருகே உள்ள அந்த கல்லறை தற்போது பொதுக்கழிப்படமாக மாறியுள்ளது. அவரது கல்லறை இருக்கும் இடத்திற்குள் செல்லும் இடத்தில் போடப்பட்டுள்ள இரும்புக் கதவு சிக்கு பிடித்துள்ளது. கல்லறைக்கு உள்ளேயும், வெளியேயும் குப்பைகள், உடைந்த மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்டவை குவிந்து கிடக்கின்றன.
ஜீவாவின் கல்லறையை பாதுகாக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications