திருமண ஆசைகாட்டி 17 பெண்களிடம் ரூ.15 லட்சம் சுருட்டிய டுபாக்கூர் ஐ.ஏ.எஸ்.
சென்னை: திருமண ஆசைகாட்டி 17 பெண்களிடம் ரூ.15 லட்சம் நகை, பணம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் நித்யா(29) என்ற என்ஜினியர் சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று கமிஷனர் திரிபாதியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நான் திருமண இணையதளம் ஒன்றில் மாப்பிள்ளை தேவை என்று விளம்பரம் கொடுத்திருந்தேன். அதை பார்த்துவிட்டு வித்யுத்(24) என்ற நபர் என்னை தொடர்பு கொண்டார். தான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வு பெற்று பயிற்சி எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். என்னை திருமணம் செய்து கொள்ளவும் விருப்பம் தெரிவித்தார். நானும் அவரது விருப்பத்தை ஏற்றுக் கொண்டேன். முறையாக பேசி திருமணத்தை முடித்து விடலாம் என்று முடிவு செய்தோம்.
இந்த நிலையில் அவர் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக தெரிவித்தார். அவரை மணக்கப் போகிறோம் என்ற ஆசையில் நானும் ரூ.10,000 பணத்தை கொடுத்தேன். அதன் பிறகு 10 சவரன் நகை வாங்கி அணிந்து கொண்டார்.
அதன் பிறகு அவர் தொடர்பை துண்டித்துக் கொண்டார். செல்போனிலும் அவரோடு பேச முடியவில்லை. அவரைப் பற்றி விசாரித்தபோது அவர் ஐ.ஏ.எஸ். பதவிக்கு தேர்வாகவில்லை என்றும், அவர் ஒரு மோசடி பேர் வழி என்றும் தெரிய வந்தது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, எனது பணம், மற்றும் நகைகளை அவரிடம் இருந்து மீட்டுத் தர வேண்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வித்யுத் குறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் டிப்ளமோ படித்தவர் என்றும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சொக்கன்தங்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடித்து பல்வேறு மோசடிகள் செய்தவர் என்பது தெரிய வந்தது.
வித்யுத் நித்யா உள்பட 17 பெண்களிடம் தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று பொய் சொல்லி திருமண ஆசைகாட்டி பண மோசடி செய்துள்ளார்.
அவர் பற்றிய அதிர்ச்சி தகவல் வருமாறு,
வித்யுத் ஏற்கனவே திருமணமானவர். அவரது மனைவியைக் கூட மோசடி செய்யப்பார்த்து இறுதியில் மணந்துள்ளார். அவர் 2 முக்கியப் பிரமுகர்களின் மகள்களையும் ஏமாற்றியுள்ளார். கடந்த 6 மாத காலமாக பெண்களை திருமண ஆசைகாட்டி ஏமாற்றி ரூ.15 லட்சம் பணம், நகை மோசடி செய்துள்ளார். அதில் ஒரு பெண்ணிடம் மட்டும் ரூ.2 லட்சம் மோசடி செய்துள்ளார்.
பணம், நகை மோசடி செய்ததோடு மட்டுமல்லாமல் 3 பெண்களுடன் உறவு கொண்டுள்ளார். அவருக்கு சக்ரவர்த்தி, தமிழ்செல்வன் என்ற பெயர்களும் உள்ளன. சிரமமின்றி பணம் சம்பாதிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். போலீசார் அவரை சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications