புதுக்கோட்டை தேர்தல் முடிவு நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி -ஜெ

இதுகுறித்து முதல்வரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த 12-ந் தேதி நடைபெற்ற புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், எனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை, வளர்ச்சித்திட்டங்களை மனதில் நிலை நிறுத்தி, எனது அன்பான வேண்டுகோளினை ஏற்று, அ.தி.மு.க. வேட்பாளர் வி.ஆர். கார்த்திக் தொண்டைமானை மகத்தான வெற்றி பெறச் செய்த புதுக்கோட்டை தொகுதி வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, புதுக்கோட்டை தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில், அ.தி.மு.ககூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் 47 சதவீத வாக்குகள் பெற்றதையும், தற்போது அ.தி.மு.க தனித்தே போட்டியிட்டு 71 சதவீத வாக்குகள் பெற்றிருப்பதையும் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, அ.தி.மு.க வாக்கு வங்கி 24 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
அதே சமயத்தில், தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் சேர்ந்து 29 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளன. மொத்தத்தில், எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கி கணிசமாக குறைந்துள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடாத தி.மு.க.வின் வாக்குகள் அ.தி.மு.க.விற்கு எதிராக விழுந்தும், அ.தி.மு.க 71 சதவீத வாக்குகள் பெற்றிருப்பது, மக்கள் அ.தி.மு.க.வின் பக்கம் இருப்பதைக் காட்டுகிறது. இது அ.தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு சாதனைக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி.
அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு அயராது உழைத்த கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கும், என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன்பிறப்புகளுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications