'சென்டிமென்ட்'படி முதலில் சென்னைக்கு வருகிறார் பிரணாப் முகர்ஜி!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவரும், நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இவருக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இவருக்கு மாற்றாக யார் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்புக்கு இன்னும் முடிவு தெரிந்தபாடில்லை. அதேசமயம், பிரணாப் முகர்ஜி தனக்கு ஆதரவு தேடி பயணம் கிளம்பத் தயாராகி விட்டார்.
பல்வேறு கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு கோர அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக வரும் 30ம் தேதியன்று அவர் சென்னை வருகிறார். அங்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு கோருகிறார்.
டெல்லியைத் தாண்டி முதல் ஊராக அவர் சென்னைக்குத்தான் வருகிறார். இதில் காங்கிரஸ் கட்சியின் சென்டிமென்ட் அடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் முதல் ஊராக சென்னைக்குத்தான் வந்தார். கருணாநிதியை சந்தித்து ஆதரவு கேட்டார். அதேபோல தற்போது பிரணாப் முகர்ஜியும் முதல் ஊராக சென்னைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை வரும் பிரணாப் முகர்ஜி, முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பாரா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications