வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் கன மழை பெய்யும்!

வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு ஜூன் இரண்டாவது வாரத்தில் தான் தொடங்கியது. ஆனாலும் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் வெயிலே வாட்டி எடுத்து வந்தது.
இந் நிலையில் இப்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரளத்தைத் தொடர்ந்து பருவமழை ஆந்திர மாநிலத்தைத்தை எட்டியுள்ளது. ஆந்திர கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது.
இது மேலும் வலுவடைந்தால் ஆந்திரா, தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் பரவலாக மழை பெய்யும். அதேபோல, கேரளத்திலும் மும்பை உள்ளிட்ட மேற்குக் கரை மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழையும் வலுவடைந்து வருகிறது. இதனால் கேரளத்திலும் மழை பெய்து வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகத்தின் மத்தியப் பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் காவிரியில் கூடுதலாக நீர் வரவும் வாய்ப்புள்ளது.
இன்று காலை முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் மேக மூட்டமாகவே காணப்படுகிறது. அதே போல பெங்களூரிலும் கடும் மேக மூட்டம் நிலவுகிறது. இதனால் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது...
கேரளத்தில் மழை கண்ணாமூச்சி ஆடி வந்ததால் குற்றால அருவிகளில் நீர் கொட்டுவதும் நிற்பதுமாக இருந்தது. இந் நிலையில் கேரளத்தில் மழை அதிகரித்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் மீண்டும் கொட்ட ஆரம்பித்துள்ளது.
ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது. பேரருவியிலும் தண்ணீர் கொட்டுவது அதிகரித்துள்ளது.
வெயில் குறைகிறது....
தமிழத்தைச் சுற்றி அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்வதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.
கத்திரி வெயில் முடிந்த நிலையிலும் 3 வாரங்களாக வெப்பம் குறையாமல் இருந்தது. அண்டை மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை வலுவடைந்துள்ளதாலும் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதாலும் தமிழகத்தில் வெயிலின் அளவு குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications