தொழிலாளர்கள் கிளர்ச்சி: வங்கதேசத்தில் 300 ஆடை தயாரிப்பு ஆலைகள் மூடல்
டாக்கா: ஊதிய உயர்வு, பணிநேரக் குறைப்பு, மலிவு விலையில் சாப்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கதேசத்தில் 5 லட்சம் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் காலவரம்பற்று மூடப்பட்டுள்ளன.
வங்கதேசத்தில் குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் கிடைப்பார்கள் என்பதாலும் ஆயத்த ஆடைகள் மிகவும் மலிவு என்பதற்காகவும் உலக அளவில் புகழ்பெற்ற ஆடை தயாரிப்பு நிறுவனங்களான ஜேசி பென்னி, வால்-மார்ட், எச் அண்ட் எம், கோல்'ஸ், மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர், கேர்ஃபோர் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய தேவைகளுக்கு துணிகளைக் கொடுத்து ஆர்டர்களை அளிக்கின்றன. தலைநகர் டாக்காவுக்கு வெளியே புறநகர்ப் பகுதியில் இந்த ஆலைகள் நிறுவப்பட்டு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வங்கதேசத்திலிருந்து வெளிநாடுகளுக்கு 80% அளவிற்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாகின்றன. இந்தத் தொழிலாளர்கள் அனைவருமே ஒப்பந்த அடிப்படையில்தான் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். மிகக்குறைந்த கூலியே தரப்படுவதால் உயரும் விலைவாசிக்கேற்ப வாழ்க்கை நடத்துவது சிரமமாக இருக்கிறது என்று தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்தனர்.
ஊதியத்தை உயர்த்த மறுத்த ஆலை நிர்வாகங்கள், போலீஸ் துணையுடன் கிளர்ச்சியை முறியடிக்கப் பார்த்தன. போலீஸாரும் தடியடி, கண்ணீர்ப்புகைப் பிரயோகம், வழக்கு என்று எல்லா முறைகளையும் கடைப்பிடித்துப் பார்த்தனர். தொழிலாளர்கள் எதிர்பார்த்தபடி ஊதிய உயர்வும் பிற சலுகைகளும் அளிக்கப்படவில்லை. எனவேதான் காலவரம்பற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறைந்த அளவிலான கூலியை உயர்த்த நிர்வாகங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால் தொழிலாளர்கள் 50% ஊதிய உயர்வு கோருகின்றனர். மேலும் கேன்டீனில் வழங்கப்படும் உணவுக்குக் குறைந்த கட்டணம், இதர சலுகைகள் வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை வலியுறுத்தி சாலை மறியல் உள்ளிட்ட கிளர்ச்சிகளைச் செய்த அவர்களைப் போலீஸார் தடியால் அடித்தும் தண்ணீர் பீரங்கியால் நீரைப் பீய்ச்சி அடித்தும் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும் கலைக்கப் பார்த்தனர். இதனால் கோபம் அடைந்த தொழிலாளர்கள் ஏராளமான வாகனங்களைக் கொளுத்தினர். தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக அனைத்து ஆலைகளும் காலவரம்பின்றி மூடப்பட்டுள்ளன.
தினமும் 10 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை உடல்நோக உழைக்கின்றனர். வாரத்தில் 6 நாள்கள் வேலைக்கு வந்தால்தான் வார இறுதியில் கூலி என்கின்றனர். இப்படி நீண்ட நேரம் உழைப்பதால் உடல் சோர்ந்து தொழிலாளர்கள் தளர்வடைகின்றனர்.
இதன் காரணமாக பணிநேரத்தை குறைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வங்கதேசத்தில் ஆயத்த ஆடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பல்வேறு நிறுவனங்களின் பார்வை திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் பக்கம் திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications