வாய் பேச முடியாத பெண் எரித்துக் கொலை: அக்கா மகனிடம் தீவிர விசாரணை
குமரி: குமரி மாவட்டத்தில் வாய் பேச முடியாத பெண் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தாணுமலையான் புதூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி லட்சுமி. வாய் பேச முடியாதவர். அவர்களுக்கு கவிதா என்ற மகள் உள்ளார். கோவிந்தன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் கவிதாவுக்கும், லட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 15 ஆண்டுகளாக அவர்கள் தனித்தனியே வசித்து வருகின்றனர்.
லட்சுமி முதியோர் உதவித் தொகை பெற்று வருகிறார். அவருக்கு வீடு இல்லாததால் அவரது அக்கா அனுசுயா என்பவர் வீட்டு திண்ணையில் படுத்து உறங்குவது வழக்கம். அப்போது பசிக்கு அக்காவிடம் உணவு, கஞ்சி தரும்படி கேட்பாராம். இதனால் அவரை தொல்லையாக நினைத்த அனுசுயா தனது வீட்டு திண்ணையில் படுக்கக் கூடாது என தகராறு செய்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கும் முன்பு இதுபோல் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து லட்சுமி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி அனுசுயாவுக்கு அறிவுரை கூறி சமாதானம் செய்து வைத்தனர்.
ஆனாலும் அவர்களுக்குள் தகராறு இருந்துள்ளது. லட்சுமி தொடர்ந்து அனுசுயா வீட்டு திண்ணையில் படுத்து உறங்கி வந்துள்ளார். நேற்றும் அவர் திண்ணையில் படுத்து உறங்கியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அனுசுயா வீட்டு பக்கத்தில் உள்ள குடிநீர் தொட்டி அருகே எரிந்த நிலையில் லட்சுமி பிணமாகக் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் லட்சுமி மீது பெட்ரோல், ஆயில் ஊற்றி கொளுத்தியது தெரிய வந்தது. மோப்பநாய் ஓரா வரவழைக்கப்பட்டது. அது உடல் கிடந்த இடத்தில் இருந்து அனுசுயா வீட்டிற்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அனுசுயாவின் மகன் கல்யாண சுந்தர் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications