அதிமுக கவுன்சிலர்களின் மோசடிகள்.. மாநகராட்சியை கலைத்து விடுவேன்-ஜெ எச்சரிக்கை!

சென்னை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்களின் கமிஷன் மோசடி, உதவித் திட்டங்களில் ஊழல், காண்ட்ராக்ட் முறைகேடுகள், பிளாட்பார கடைகளில் மிரட்டி பணம் வசூலிப்பது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. கடந்த திமுக ஆட்சியிலும் மாநிலம் முழுவதும் கவுன்சிலர்களின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
அஞ்சுக்கும் பத்துக்கும் அலைந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் கவுன்சிலர்கள் ஆனவுடன் ஸ்கார்பியோ கார்களில் பறக்க ஆரம்பித்தனர். திமுக ஆட்சியை இழக்க மிக முக்கிய காரணமாக இருந்ததும் இந்த ரவுடி-திருட்டு கவுன்சிலர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்ற நிலை தான் இப்போதும் நிலவுகிறது. இது குறித்து ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து உளவுப் பிரிவினர் மூலம் தகவல்களை சேகரித்த முதல்வர் ஜெயலலிதா சென்னை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்களின் கூட்டத்தை நேற்று திடீர் என்று கூட்டினார். தியாகராய நகரில் உள்ள மாநகராட்சி மண்டபமான சர்.பிட்டி.தியாகராஜர் கலையரங்கில் சுமார் அரை மணி நேரம் நடந்த இக் கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு கடுமையாக டோஸ் விட்டுள்ளார் ஜெயலலிதா.
இந்த கூட்டம் தொடங்கியதும் ஜெயலலிதா தவறு செய்த கவுன்சிலர்கள் பெயர் பட்டியலை வாசித்தார். அதில் ஒரு சில கவுன்சிலர்களை இருக்கையில் இருந்து எழுந்து நிற்குமாறும் உத்தரவிட்டார்.
பின்னர் பேசிய ஜெயலலிதா, உங்கள் மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளன. பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களிடமே வசூல் வேட்டை நடத்தி வருவதாக புகார் கூறுகிறார்கள். ஒரு முதல்வர் கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு அறிவுரை வழங்கும் அளவுக்கு நீங்கள் மோசமாக நடந்து உள்ளீர்கள்.
கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைந்தது. இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் அட்டூழியம் கொலை வெறி தாக்கு, நில அபகரிப்பு, கொள்ளை உள்பட பொதுமக்களுக்கு எதிரான செயல்களில் செயல்பட்டதுதான்.
கவுன்சிலர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அது ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளை கவுன்சிலர்கள் அறிந்து அவற்றை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டும். அதை விட்டுவிட்டு அதிகாரிகளிடம் பேரம் பேசி காரியம் சாதிக்க நினைக்க கூடாது. இதனால் சில அதிகாரிகள் நேரடியாகவே முறைகேடுகளில் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள்.
பொதுமக்கள் மத்தியில் ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வேலைகளில கவுன்சிலர்கள் இனிமேல் ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தவறு செய்யும் கவுன்சிலர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் தருகிறேன். அதற்குள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து கவுன்சிலர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தகவல் வந்தால் மாநகராட்சியையே கலைத்து விடுவேன்.
என்னை பொறுத்த அளவில் தவறே நடக்கக்கூடாது. அதில் நீங்கள் தவறினால் மாநகராட்சியை கலைத்துவிட்டு 6 மாதத்தில் மீண்டும் மாநகராட்சி தேர்தலை நடத்துவோம். தவறு செய்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. மாறாக அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் பாயும் என்று ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களில் சிலர் தங்கள் பெயர்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு மேற்கண்ட விவரங்களைத் தெரிவித்தனர்.
முன்னதாக, கூட்டம் நடைபெற்ற அரங்கிற்குள் கவுன்சிலர்கள் அனைவரும் தங்களின் அடையாள அட்டையை காண்பித்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பெஞ்சமின் ஆகியோரும் கலந்து கொண்டனர். பத்திரிகையாளர்கள் உள்பட வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை.
சென்னை மாநகராட்சி தேர்தல் 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மேயர் வேட்பாளராக சைதை துரைசாமி வெற்றி பெற்றார். சென்னை மாநகராட்சில் கவுன்சிலர்கள் மொத்தம் 200 பேர். இதில் ஓர் இடம் காலியாக உள்ளது. எஞ்சிய 199 பேரில் 169 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 72 பேர் பெண்கள் ஆவர்.
தி.மு.கவுக்கு 24 கவுன்சிலர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 2 கவுன்சிலர்களும், தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா ஒரு கவுன்சிலர்களும், 2 சுயேச்சை கவுன்சிலர்களும் உள்ளனர். சுயேச்சைகள் 2 பேரும் அ.தி.மு.க.வில் இணைந்ததால் அ.தி.மு.க.வின் பலம் 170 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications