மம்தா கட்சியில் பிளவு: பிரணாப் முகர்ஜிக்கு மூத்த எம்.பி. ஆதரவு!
கொல்கத்தா: ஜனாதிபதி தேர்தல் பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் மட்டுமல்ல, பல கட்சிகளிலும் பிளவை ஏற்படுத்தி வருகிறது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முடியாது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துவிட்டார். ஆனாலும் அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த எம்பியான கபிர் சுமன், பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கர்நாடக பாஜகவின் முக்கியத் தலைவரான எதியூரப்பா தனது சிபிஐ சிக்கல்களில் இருந்து தப்புவதற்காக மத்திய அரசின் தயவைப் பெற பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்து பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளார். இவரது ஆதரவு எம்பி, எம்எல்ஏக்கள் பிரணாபுக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலும் பிரணாபுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே இந்தக் கட்சியின் சார்பில் ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதியும் மேலும் சில எம்பிக்களும் மம்தாவின் பேச்சை கேட்பதில்லை.
இந் நிலையில் மூத்த எம்பியான கபிர் சுமன் கூறுகையில், ஜனாதிபதியாவதற்கு மிக ஏற்ற நபர் பிரணாப் முகர்ஜி தான். ஜனாதிபதி என்பவர் பெருத்த அனுபவம் பெற்ற திறமைசாலியாக இருக்க வேண்டும். இதற்கு இப்போது பிரணாபை விட்டால் வேறு வழியில்லை. மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியான பிரணாப் தான் ஜனாதிபதியாக வேண்டும்.
மேலும் பெங்காலியான பிரணாப் ஜனாதிபதியாவதில் எனக்கு மிகுந்த பெருமையும் உண்டு என்றார்.
மேலும் அவர் கூறுகையில், மம்தா பானர்ஜி மிகச் சிறந்த அரசியல்வாதி. தனி ஒரு ஆளாக நின்று இடதுசாரிகளை வீழ்த்தியவர். ஆனால், இன்னும் தன்னை ஒரு எதிர்க் கட்சித் தலைவராகவே அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். தான் ஒரு முதல்வர் என்பதை அவர் மறக்கக் கூடாது. அமைதியாக இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டமான அரசியல், போராளி மாதிரியான செயல்கள் எல்லாம் இனி தேவையில்லை என்றார்.
கபிர் மிகச் சிறந்த பாடகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், மம்தாவின் தாளத்துக்கு பாடாமல் காங்கிரஸ் பாட்டை பாடிவிட்டார்.