பாக். பிரதமர் வேட்பாளர் ராஜா பர்வேஸ்: சகாபுத்தீன் இல்லை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளராக ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ராஜா பர்வேஸ் அஷ்ரப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் கிலானி அப்பதவியில் இருக்கத் தகுயில்லாதவர் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து அவரது பதவி பறிபோனது. புதிய பிரதமராக ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் மக்தூம் சகாபுத்தீன் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சகாபுத்தீன் பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது தடை செய்யப்பட்ட மருந்தை இறக்குமதி செய்வதில் நடந்த முறைகேடு தொடர்பாக அவருக்கும், கிலானியின் மகன் அலி மூஸா கிலானிக்கும் எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரையும் கைது செய்து 2 வாரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு ராவல்பிண்டி போதைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பிரதமர் தேர்தலில் சகாபுத்தீனுக்கு வேலையில்லை என்றாகிவிட்டது. இதையடுத்து நேற்று இரவு நடந்த பாகி்ஸ்தான் மக்கள் கட்சி கூட்டத்தில் புதிய பிரதமர் வேட்பாளராக ராஜா பர்வேஸ் அஷ்ரப் தேர்வு செய்யப்பட்டு முறைப்படி அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் நாட்டின் 20வது பிரதமரைத் தேர்வு செய்ய அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி நாடாளுமன்ற அவையை இன்று மாலை 5.30 மணிக்கு கூட்டியுள்ளார். அதில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார்.