டெல்லி முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையர்கள் அட்டூழியம்- துப்பாக்கியால் தாக்கி ரூ50 லட்சம் கொள்ளை
டெல்லி ரோகிணி பகுதியில் 3-வது செக்டர் அகர்வால் காம்ப்ளக்சில் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று 6 மர்ம மனிதர்கள் ஆயுதங்களுடன் வந்தனர். அங்கிருந்த காவலாளி ராஜேஷ் குமாரை தாக்கி ஊழியர்களை மிரட்டினர்.
இதைத் தொடர்ந்து ஊழியர்களிடம் இருந்து பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். ரூ50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
கொள்ளையர் தாக்குதலில் படுகாயம் அடைந்த காவலாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்நிலையம் அருகிலேயே நடந்துள்ள இந்த கொள்ளைச் சம்பவம் டெல்லி வர்த்தகர்களிடையே பெரும் பீதியை உருவாக்கியுள்ளது.
வடமாநிலங்களில் இருந்து தமிழகத்தை குறிவைத்து கொள்ளையர்கள் செயல்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் தலைநகர் டெல்லியில் நடந்துள்ள இக்கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.