நான் ஹீரோவாக முடியாதா... ஏக்கத்தில் பட்டறை அதிபர் தற்கொலை!
கோவை: சர்க்கரை நோய் வந்து உடல் மெலிந்து போனதால், சினிமாவில் ஹீரோ ஆகும் ஆசையுடன் சென்னைக்கும், கோவைக்குமாக அலைந்து திரிந்து கொண்டிருந்த ஒரு நகைப் பட்டறை அதிபர் தனது மனைவி, 2 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சினிமாப் பைத்தியம் மக்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. சினிமாவில் நடிக்க ஆசை கொண்டு சென்னைக்கு ஓடி வரும் பெண்களின் எண்ணிக்கை சற்றும் குறைந்தபாடில்லை. ஆனால் இவர்கள் தவறானவர்களின் கைகளில் சிக்கி விபச்சாரம் உள்ளிட்ட படுகுழிகளில் தள்ளப்படுகின்றனர்.
இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த தங்க நகைப் பட்டறை நிறுவன அதிபர் ஒருவர் சினிமாப் பைத்தியம் முற்றி தற்கொலையே செய்து கொண்ட பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.
கோவை மருதமலை ரோடு ஐ.ஓ.பி.காலனி ராகவேந்திரா வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு 35 வயதாகிறது. சொந்தமாக நகைப் பட்டறை வைத்துள்ளார். தொழிலும் நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. இவரது மனைவி பெயர் சுதா. இந்தத் தம்பதிக்கு அழகான இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நகைப் பட்டறை வைப்பதற்கு முன்பு திரைப்பட தொழில்நுட்ப டிப்ளமோவை முடித்துள்ளார் மோகன் ராஜ் என்று தெரிகிறது. இதனால் சினிமாவில் நடிக்க ஆசையுடன் திரிந்து வந்தார். அடிக்கடி தன்னை விதம் விதமாக போட்டோ எடுத்துக் கொண்டு ஆல்பத்துடன் சென்னை கிளம்பி விடுவார்.
ஆனால் துரதிர்ஷ்டத்தைப் பாருங்கள், மோகன்ராஜுக்கு சர்க்கரை நோய் வந்து விட்டது. இதனால் உடல் மெலிந்து போயுள்ளது. இதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார் மோகன்ராஜ். இனிமேல் என்னால் சினிமாவில் நடிக்க முடியாதா, ஹீரோவாக முடியாதா என்று வருத்தப்படத் தொடங்கினார்.
இத்தனை நாள் சினிமாக் கனவு நிறைவேறாமல் போய் விடுமோ என்று பயந்து போன அவர் வருத்தத்தில் தனது பட்டறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
இதுகுறித்து மோகன்ராஜின் தந்தை ஜெயராமன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications