ஆதீனத்திற்கு குண்டு வைக்கப் போகிறார் நித்தியானந்தா... மீனாட்சி பிள்ளைகள் குற்றச்சாட்டு

இதுதொடர்பாக இந்த அமைப்பின் செயலாளர் ஜெகதலபிரதாபன் மதுரை காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் மதுரை ஆதீன மடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அந்த மடத்தின் பொறுப்பில் உள்ள நித்தியானந்தா ஆதரவாளர்களில் ஒருவர் விளக்குத்தூண் போலீஸில் புகார் கொடுத்தார். அதில் மீனாட்சி பிள்ளை அமைப்பு என்ற அமைப்பிலிருந்து மிரட்டல் வந்ததாக கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த அமைப்பின் செயலாளர் ஜெகதலபிரதாபன் மதுரை காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில்,
நான் மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பின் செயலாளராக உள்ளேன். எனது அமைப்பின் சார்பில் ஆதீன மடத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கத்தில் மதுரை ஆதீனம் அருணகிரி நாதரும், நித்தியானந்தாவும் ஒரு பொய்யான மிரட்டல் கடிதத்தை தாங்களே தயார் செய்து ஆதீன மடத்திற்கு எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் வெடிகுண்டு மிரட்டல் விட்டதாக போலி பிரசாரம் செய்கின்றனர். இதனால் நாங்கள் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.
மேலும் நித்தியானந்தாவால் எனக்கும், எங்களது அமைப்பை சார்ந்தவர்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எங்களுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
நித்தியானந்தாவும், அவருடைய கூட்டாளிகளும் மதுரை ஆதீன மடத்தை குண்டு வைத்து தகர்த்து விட்டு, அந்த பழியை எங்கள் அமைப்பின் மீது சுமத்த திட்டமிட்டு உள்ளார்கள். எனவே மதுரை ஆதீன மடத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். பராம்பரியமிக்க மதுரை ஆதீன மடம் குற்றப்பின்னணியில் உள்ள நித்தியானந்தா கையில் சிக்கி அதன் புனிதத் தன்மையும், பராம்பரியமும் சீர்குலைந்து விட்டன. இந்த மடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த உண்மையான நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications