திருச்சியில் குப்பைத் தொட்டியில் கிழித்துப் போடப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுக்கள்
திருச்சி: திருச்சியில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளை யாரோ கிழி்த்துப் போட்டுள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் உறையூர் சோழராஜபுரம் பகுதியில் உள்ளது களத்துமேடு. அங்கு அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் 2 உள்ளன. மேலும் அப்பகுதியில் தனியார் பள்ளியும், 2 தனியார் வங்கிகளும் உள்ளன. அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் 2 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
குப்பைத் தொட்டியில் கிடைக்கும் பொருட்களை எடுத்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தும் தில்லைநகரைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவர் நேற்று காலை களத்துமேடு குப்பைத் தொட்டிக்கு வந்தார். அப்போது குப்பைத் தொட்டியில் அட்டைப் பெட்டியும், அதன் அருகில் ஏகப்பட்ட ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ1000 ரூபாய் நோட்டுகள் கிழித்துப் போடப்பட்டிருந்தன. உடனே இது குறித்து குப்பைகள் அள்ளும் மாநகராட்சி ஊழியர்களுக்கு அவர் தகவல் கொடுத்தார். இதற்கிடையே இந்த தகவல் அறிந்து அப்பகுதி சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை பலர் வந்து நோட்டுக்களை அள்ளிச் சென்றனர். ஆனால் அவை கிழிக்கப்பட்டிருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரூபாய் நோட்டுக்களை உறையூர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். விசாரணையில் கிழிக்கப்பட்ட நோட்டுக்கள் அனைத்தும் நல்ல நோட்டுக்கள் என்று தெரிய வந்தது. மேலும் அதன் மதிப்பு ரூ.2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
நோட்டுக்களை கிழித்து வீசியது யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவை கறுப்பு பணமாக இருக்கலாம் அல்லது வருமான வரித்துறையினருக்கு பயந்து இவ்வாறு செய்திருக்கலாம், அல்லது லஞ்சப் பணமாக இருக்கலாம் என்று போலீசார் நினைக்கிறார்கள்.
இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தாங்கள் எடுத்துச் சென்ற நோட்டுக்களை உதவி கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.