விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டா போட்டி
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் அனைத்து பதவிகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைக்கப்பட்டது. இதனையடுத்து கட்சியை பலப்படுத்த அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. முடிவு செய்தார். அதன்படி பெரிய மாவட்டங்களை 4 ஆகவும், சிறிய மாவட்டங்களை 3 மற்றும் 2 ஆகவும் பிரித்து நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த நிலையில் மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பம் மாவட்டம் வாரியாக பெறப்பட்டுள்ளதாம்.
மாவட்ட செயலாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தவர்களில் வட சென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சேலம், திருச்சி மாவட்டங்களுக்கான நேர்காணல் சென்னையை அடுத்த மறை மலைநகரில் நடைபெற்று முடிந்துவிட்டதாம்.
இதில் மாவட்ட செயலாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களிடம் தனித்தனியாக திருமாவளவன் ஆய்வு நடத்தியுள்ளார். யாருடைய சிபாரிசும் இல்லாமல் கட்சியில் சிறப்பாக பணியாற்றக் கூடியவர்கள், வழக்குகளில் சிக்காதவர்கள் யார்? என ஆராய்ந்து புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்களாம்.
சமீப காலமாக வளர்ந்து வரும் கட்சிகளில் ஒன்றாகவும், ஈழத் தமிழர்களுக்கு துணிந்து குரல் கொடுக்கும் அமைப்பாகவும் விடுதலை சிறுத்தைகள் இருப்பதால் மக்கள் மத்தியல் நல்ல செல்வாக்கு பெற்று வருகின்றது. இனால் இந்த கட்சியில் பதவியைப் பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications