பிரதமர் பதவிக்கு "மதச்சார்பின்மை" அடையாளம் சுமத்தக் கூடாது: ஆர்.எஸ்.எஸ்.
டெல்லி: நாட்டின் பிரதமராக பதவியேற்பவருக்கு மதச்சார்பின்மை அடையாளம் இருக்க வேண்டும் என்ற புதிய கருத்தை ஆர்.எஸ்.எஸ். நிராகரித்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகாரபூர்வ இதழான பாஞ்சஜன்யாவின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
85 சதவிகித மக்கள் இந்துக்களாக இருக்கும் இந்நாட்டில் ஹிந்துத்வா என்றால் வெறுப்பது ஏன்? இந்நாட்டின் பிரதமர் மதசார்பற்றவராக இருக்க வேண்டும் என்று கூறுவதன் பொருள் என்ன?
நமது அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கியவர்கள் இந்த விதமான "மேன்மையான அடையாளம்' எதையும் பிரதமர் பதவிக்கு கட்டாயமாக்கவில்லையே, ஏன்?. காரணம், அவர்களுக்கு இந்தியா எப்போதுமே மதம், கலாசாரம் அனைத்திலும் மிகச்சிறந்த மதிப்புகளுடனும் திகழ்ந்து வருகிறது என்பது தெரியும்.
நமது சமூகம், தேசிய வாழ்க்கை ஆகியவற்றின் அடிப்படையே பரஸ்பரம் விட்டுக்கொடுத்து வாழ்வதும் அனைத்தும் தழுவியதுமான எண்ணமும்தான். இதனை அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கியவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.
மத்திய அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பிரதமரின் முக்கிய பொறுப்பு, ஜனநாயகக் மதிப்பீடுகளைக் காப்பதும்; பாரபட்சமின்றி அனைவரது உரிமைகளைக் காப்பதும்தான்.ஆனால், இதற்கு நேர்மாறாக பிரதமருக்கு "மதச்சார்பின்மை' அடையாளத்தை சுமத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தியாவில் ஹிந்து மத தத்துவத்தின் சிறப்பம்சமே அனைத்துப் பிரிவினருடன் நல்லிணக்கம் கொள்வது என்பதுதான். ஹிந்துத்வாவை வகுப்புவாதம் போல் சித்திரிப்பதும்; அதிகாரத்தை அடைய மதசார்பின்மையை பயன்படுத்துவதும் சந்தர்ப்பவாத அரசியலன்றி வேறு அல்ல.
முஸ்லிம் வாக்குகளைக் குறிவைத்திருக்கும் அரசியல்வாதிகளால், ஹிந்துத்வாவும் ஹிந்துக்கள் நலனும் வகுப்புவாதமாகப் பார்க்கப்படுகிறது. பெரும்பான்மையான ஹிந்துக்கள் பற்றி அக்கறைப்படுகிற பிரதமரும் ஆட்சியும் இந்தியாவில் ஏன் இருக்கக்கூடாது? என்று "மதசார்பற்ற ஆட்சியை' வலியுறுத்தும் அரசியல்வாதிகளைப் பார்த்து மக்கள் கேட்கவேண்டும்.
சிறுபான்மையினர் - பெரும்பான்மையினர்; வகுப்புவாதம் - மதச்சார்பின்மை; ஜாதிகள் - பிரிவுகள் என வாக்குவங்கி அரசியல் இந்தியாவை பலவிதமாகக் கூறுபோட்டிருக்கிறது. இதுபோன்ற பிளவுகளை இல்லாமல் போக்குவதற்குப் பதில், ஆட்சியைக் கைப்பற்ற பிளவுகளே மேலும் ஆழமாக்குவதற்கான சதிகளே மேற்கொள்ளப்படுகின்றன என்று பாஞ்சஜன்யாவின் தலையங்கம் கூறுகிறது.












Click it and Unblock the Notifications