ஜூலை 5 முதல் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: 3,900 பேருக்கு அழைப்பு
சென்னை: எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜூலை மாதம் 5ம் தேதி துவங்குகிறது.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 27,877 மாணவ-மாணவியர் விண்ணப்பதிருந்தனர். அவர்கள் அனைவரின் விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதையடுத்து ரேங்க் பட்டியல் கடந்த 25ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 3,900 பேருக்கு எம்.பி.பி.எஸ். கலந்தாய்வுக்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜூலை மாதம் 5ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம் மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் அடங்கிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது.
மேலும் அன்றைய தினம் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்று முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவியருக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான சான்றிதழ்களை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் வழங்குகிறார். ரேங்க பட்டியல் அடிப்படையில் வரும் 16ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வுக் கடிதம் கிடைக்காதவர்கள் அதை சுகாதாரத் துறையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதில் மொத்தம் 1,696 இடங்கள் உள்ளன. மேலும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 838 உள்ளன. இவை அனைத்திற்கும் சேர்த்து தான் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவ-மாணவியருக்கான கட் ஆஃப் மதிப்பெண் 198.50கவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 197.50கவும், பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மதிப்பெண் 196.25கவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 196.25கவும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பினருக்கு 192.50கவும், பழங்குடி வகுப்பினருக்கு 189.25கவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications