காற்றாலை மின் உற்பத்தி குறைவு: மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
நெல்லை: நெல்லை மண்டல காற்றாலைகளில் மின் உற்பத்தி குறைந்து வருவதால் மின்வெட்டு நேரம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தி்ல் கடந்த 1 வருடமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது. ஒரு மாதத்திற்கு முன் வரை நாள்தோறும் 12 மணி நேரம் பல இடங்களில் மின்தடை செயயப்பட்டது. கடந்த ஒரு மாதமாக நெல்லை மண்டலத்தில் உள்ள காற்றாலைகள் சுழலத் தொடங்கியதால் அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி மின்வெட்டு நேரத்தை குறைத்தனர்.
இந்த மண்டல காற்றாலைகள் மூலம் அதிகபட்சமாக ஒரே நாளில் 3,549 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் மின்தடை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக காற்றாலைகள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு குறைந்துள்ளது. நெல்லை மண்டலத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் நேற்று முன்தினம் 1,500 மெகாவாட்டும், நேற்று 1,600 மெகாவாட் மின்சாரமும் மட்டுமே கிடைத்தது.
இதனால் பகலில் 3 மணி நேர மின்தடை போக கூடுதலாக அவ்வப்போது 1 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. காற்றின் வேகம் குறையும் போதேல்லாம் முன் அறிவிப்பு இன்றி அமல்படுத்தப்படும் மின்தடையால் மாலை, இரவில் மட்டுமின்றி நள்ளிரவு, அதிகாலை நேரங்களிலும் மக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.