என்ஜினியரிங் கட் ஆப் மார்க் ரேங்க் பட்டியல் வெளியீடு: திருவண்ணாமலை மாணவர் முதலிடம்!
சென்னை: இந்த ஆண்டு என்ஜினியரிங் படிப்பிற்காக விண்ணப்பித்தவர்களின் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையிலான ரேங்க் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் திருவண்ணாமலையை சேர்ந்த தேவபிரசாத் என்ற மாணவர் முதலிடத்தை பெற்றார். மேலும் 32 பேர் சென்டம் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு என்ஜினியரிங் படிப்புக்காக 1 லட்சத்து 80 ஆயிரத்து 71 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கான ரேண்டம் எண் கடந்த 25ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையிலான ரேங்க் பட்டியல் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது.
தமிழக அரசு உயர் கல்வித்துறை செயலாளர் ஸ்ரீதர் இந்த ரேங்க் பட்டியலை வெளியிட்டார். அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சண்முகவேல், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்திரியராஜ், பேராசிரியர் சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இப்பட்டியலில் 32 பேர் 200க்கு 200 கட்-ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் திருவண்ணாமலையை சேர்ந்த தேவபிரசாத் என்ற மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். வேலூரை சேர்ந்த சிவகுமார் 2வது இடம் பெற்றார். அவர் பிற்படுத்தப்பட்டோர் வகுப்புக்கான ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்றுள்ளார்.
அவருக்கு அடுத்தப்படியாக 3வது இடத்தை பிடித்த திருச்சி கவுதம், பிற்படுத்தப்பட்டோர் வகுப்புக்கான ஒதுக்கீட்டில் 2வது இடம் பெற்றார். இந்த ரேங்க் பட்டியலின் அடிப்படையில் மாணவ, மாணவியர் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அழைக்கப்படுபவர்.
பொது கவுன்சிலிங் 13ம் தேதியும், விளையாட்டு வீரர்களின் கோட்டாவில் வரும் மாணவர்களுக்கு வரும் 5ம் தேதியும் கவுன்சிலிங் நடைபெற உள்ளது. இந்த என்ஜினியர் படிப்பிற்காக விண்ணபித்துள்ள மாணவர்கள், மேலும் விவரங்களுக்கு அண்ணா பல்கலை கழக வெப்சைட்டில் தகவல்களை பெறலாம் என்று பல்கலை கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications