பணியாளரை தற்கொலைக்கு தூண்டியதாக 4 அதிகாரிகளின் மீது வழக்கு
திருப்பூர்: திருப்பூரில் பனியன் கம்பெனி ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக நிர்வாகத்தினர் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். திருப்பூர் கோவில்வழியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். பனியன் கம்பெனியில் இவரது நண்பர் பனியன் துணிகளை திருடியதாக தெரிகிறது.
நண்பருடன் மணிகண்டன் இருந்த போது இருவரையும் பிடித்து கம்பெனி நிர்வாகிகள் விசாரித்துள்ளனர். மேலும் இருவரையும் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் நண்பரை மட்டும் திருப்பூர் ரூரல் போலீஸ் நிலையத்தில் கம்பெனியினர் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே நேற்று மதியம் பனியன் கம்பெனியில் சந்தேகத்திற்கடமான வகையில் மணிகண்டன் இறந்து கிடந்தார். மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கம்பெனி நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் ரூரல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் மணிகண்டன் தவறி விழுந்து இறக்கவில்லை. கம்பெனி நிர்வாகிகள் அடித்து கொன்றுவிட்டதாக, மணிகண்டனின் சகோதரி சரசம்மாள் திருப்பூர் ரூரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கொலை வழக்காக பதிவு செய்யாவிட்டால் உடலை வாங்க போவதில்லை என்று கூறி நேற்று மாலை அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பனியன் ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக பனியன் நிர்வாகத்தினர் துரைச்சாமி, சோமு, கணேசன், முருகன் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் துரைச்சாமி, கணேசன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications