குடியரசுத் தலைவர் தேர்தலில் மமதா பானர்ஜி நிச்சயம் ஆதரிப்பார்: பிரணாப் முகர்ஜி நம்பிக்கை

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் பிரணாப் முகர்ஜி நேற்று சென்னை வருகை தந்திருந்தார். திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவைக் கோரிய அவர் காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கும் சென்றார்.
அங்கு காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பிரணாப் முகர்ஜி கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள என்னை பல கட்சிகள் ஏற்கெனவே ஆதரித்துள்ளன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் கட்சிகளும் கூட ஆதரவு தெரிவித்துள்ளன.
இதேபோல் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் ஆகியனவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவையும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இடதுசாரி அணியில் மார்க்சிஸ்ட் மற்றும் பார்வார்டு பிளாக் கட்சிகளும் ஆதரவளிப்பதாகக் கூறியிருக்கின்றன.
ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர் என்பவர் அந்த நாட்டின் ஒட்டுமொத்த கவுரவத்தை பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், நாட்டின் நிர்வாக ரீதியான திட்டங்களை தீட்டுவது, கொள்கைகளை வகுப்பது ஆகியவை குடியரசுத் தலைவரின் அதிகார வரம்பிற்குள் இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் பலம். இந்தியாவில் சாதி, மதம், மொழி, இனம், கட்சிகள் என்று பன்முகத்தன்மை இருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை இருக்கிறது என்றார் அவர்.
இந்த சந்திப்பில் குடியரசுத் தலைவரான பிறகு ராஜீவ் வழக்கில் தூக்கை எதிர்நோக்கி இருக்கும் மூன்று தமிழர்கள் விஷயத்தில் என்ன முடிவு எடுப்பீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பிரணாப் நேரடியாக பதிலளிக்கவில்லை. "குடியரசுத் தலைவருக்கு என்னென்ன அதிகாரம் இருக்கிறது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 53-ல் இருந்து பல்வேறு ஷரத்துகளில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. முந்தைய குடியரசுத் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி நான் செயல்படுவேன என்றார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த பிரணாப், அனைத்து கட்சியினரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான என்னை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளேன். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி நிச்சயம் என்னை ஆதரிப்பார் என்று நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications