செயல்படாத ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
டெல்லி: சிறப்பாக செயல்படாத ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து வீட்டுக்கு அனுப்புமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் அலுவலகப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சார்பில் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பணிக்கு வந்து குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் ஆகிவிட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., அதிகாரிகளின் பணித்திறன், சாதனைகள் குறித்து மாநில அரசுகள் மறுஆய்வு செய்ய வேண்டும். இப்போதுள்ள ஆண்டு மதிப்பீடு அறிக்கை அளிக்கும் நடைமுறையில், "அதிகாரிகளின் செயல்பாடுகள் சராசரி, திருப்தியளிக்கிறது, தகுதியானவர்" என்பன போன்ற மதிப்பீடுகளே வழங்கப்படுகின்றன. இதன் மூலம் ஒருவரது சாதனைகள், பணித்திறன் உள்ளிட்டவற்றை அறிய முடியவில்லை. சில சமயங்களில் அதிகாரிகளின் நேர்மையான பணி குறித்து அரைகுறையான மதிப்பீடுகளே அறிக்கையாக வருகின்றன. இவற்றின் மூலம் எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது. இதனால் பணிக்கு வந்து 15 ஆண்டுகளோ அல்லது 25 ஆண்டுகளோ அல்லது குறைந்தபட்சம் 50 வயது ஆன அதிகாரிகள் இயல்பாகவே பதவி உயர்வின் மூலம் உயர் பதவியை அடைந்து விடுகின்றனர். அத்தகைய உயர் பதவிகளில் திறமையற்றவர்கள் அமர்ந்துவிடாமல் தடுக்க வேண்டும்.
15 ஆண்டுகள் பணிபுரிந்த அதிகாரிகளின் செயல்பாட்டில் திருப்தி இல்லையென்றால், பொதுமக்களின் நலன் கருதி அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதிகாரிகளின் பணித்திறனை ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கையை 6 மாதங்களுக்குள் மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.