லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது விமான தாக்குதல் நடத்த அல்- கொய்தா புதிய திட்டம்?
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது, அமெரிக்க விமானங்களின் மீது தாக்குதல் நடத்த அல் -கொய்தா தீவிரவாத அமைப்பு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லண்டன் ஒலிம்பிக் வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் உலக நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள், வீராங்கணைகள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியை சீர்க்குலைக்கும் வகையில், அல்-கொய்தா அமைப்பு போட்டியின் இடையே அமெரிக்க விமானங்களின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக சண்டே டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதலை நடத்துவதற்காக, நார்வேயை சேர்ந்த ஒருவரை, முஸ்லீம் மதத்திற்கு மாற்றி, அவருக்கு தீவிரவாத பயிற்சி அளித்திருப்பதாக தெரிகிறது. சுமார் 30 வயதாகும் அபு அப்தர் ரஹ்மான் என்ற அந்த நபருக்கு, ஏமன் நாட்டில் தீவிரவாத பயிற்சி அளித்துள்ளனர்.
இது குறித்து அந்த நாளிதழில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது,
கடந்த 2008ம் ஆண்டு முஸ்லிமாக மதம் மாற்றப்பட்ட அபு அப்துர் ரஹ்மான், சுமார் 30 வயதை கொண்டவராக இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் அவர் இதுவரை எந்த குற்ற வழக்குகளிலும் சிக்காதவர்.
ஏமானில் 7 மாதங்கள் தீவிரவாத பயிற்சி பெற்றுள்ள அபு அப்துர் ரஹ்மான், தாக்குதல் நடத்த தயாராக உள்ளார். இதேபோல மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களை அதிகளவில் முஸ்லீம் மதத்திற்கு மாற்றி தீவிரவாத தாக்குதல் நடத்த அல் கொய்தா அமைப்பு திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உளவுத்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த விசாரணையில், அபு அப்துர் ரஹ்மான் கடந்த மாதம் வரை நார்வேயில் உள்ள அஸன் என்ற பகுதியில் குடியிருந்ததாக தெரிகிறது. அதன்பிறகு தம்மாஜ் என்ற பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு முதல் அல்-கொய்தா அமைப்பு இது போன்ற தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்று வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த நைஜீரிய மாணவர் ஒருவர் தனது உள்ளாடையில் குண்டு வைத்த நிலையில் சிக்கினார்.
அதேபோல கடந்த 2010ம் ஆண்டு சிக்காக்கோ நகருக்கு சென்ற கார்கோ விமானத்தில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கபட்டு, செயலழக்கம் செய்யப்பட்டது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.