40க்கு 40 நமக்கே.. இன்று முதலே ஆரம்பியுங்கள்: ஓ.பன்னீர் செல்வம் உத்தரவு!
சென்னை: வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் அதிமுகவே கைப்பற்ற வேண்டும். அதற்கான பணிகளை இன்றே தொடங்குங்கள் என்று அதிமுகவினருக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. அதில் நடிகர் ராமராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில்,
தமிழகத்தில் அதிமுக 22 ஆண்டு காலம் ஆட்சி நடத்தி உள்ளது. இப்போது 23-வது வருடம் நடந்து வருகிறது. எந்த ஒரு கட்சியும் தமிழகத்தில் இவ்வளவு காலம் நாட்டை ஆண்ட சரித்திரம் இல்லை. அதனால்தான் அதிமுகவில் இளைஞர்கள் உறுப்பினராகி வருகிறார்கள்.
நூறாண்டில் வேண்டிய சாதனைகளை ஓராண்டில் செய்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நாட்டு மக்கள் புதுக்கோட்டை தேர்தலில் வெற்றிவாகை சூட்டினார்கள். நில அபகரிப்பு வழக்கில் திமுகவினரை கைது செய்வதில் என்ன தப்பு இருக்கிறது. திமுகவை அதிமுக அரசு பழிவாங்குகிறது என்று கருணாநிதி கூறுகிறார்.
முதல்வர் ஜெயலலிதா பொதுமக்களின் பிரச்சினையை தீர்த்து வைத்தால் பழிவாங்குகிறார்கள் என்று அர்த்தமா? நாட்டு மக்களுக்கு விலையில்லா ஆடு, மாடுகள், அரிசி மற்றும் முதியோர் உதவி தொகை அதிகரிப்பு, ஊனமுற்றோருக்கு உதவிகள் என பல்வேறு நல்ல திட்டங்களை செய்து வருகிறார்.
தமிழகத்தை பார்த்து பிற மாநில முதல்வர்களும் திட்டங்களை பின்பற்றி வருகிறார்கள். முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால் இந்தியாவின் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 நாம் வெற்றி பெற இன்று முதல் உழைக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications