பொறியியல் கல்லூரிகளில் விளையாட்டு வீரர்களுக்கு 500 இடம் ஒதுக்கீடு: ஜெ.வுக்கு சரத்குமார் பாராட்டு
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களை 500க உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமக தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உலக அளவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் எண்ணிக்கை இருக்கும் அளவிற்கு விளையாட்டுத் துறையில் குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளில் மிகக் குறைவாகவே சாதனைகள் படைத்து வருகிறது. விளையாட்டுத் துறையில் ஆர்வமும், சாதனைகள் படைக்க ஊக்கமும் ஏற்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.
அந்த வகையில் தமிழக அரசு விளையாட்டுத் துறைக்கு பல்வேறு சலுகைகள் அளித்து வருவதோடு, முதல்வர் ஜெயலலிதா மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக பொறியியல் கல்லூரிகளில் 500 இடங்கள் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஒதுக்கித்தர உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
பொறியியல் கல்லூரிகளில் விளையாட்டு வீரர்களுக்கு இடங்கள் ஒதுக்குவதன் மூலம் ஒருபுறம் அவர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் நிச்சயம் அதிகரிக்கும். மறுபுறம் பல்வேறு விளையாட்டுக்களை ஆதரித்து ஊக்குவிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு விளையாட்டு வீரர்கள் கிடைப்பார்கள்.
முதலமைவரின் அறிவிப்பு, வருங்காலத்தில் விளையாட்டுத் துறையில் இந்தியா புகழ் ஏணியில் ஏறுவதற்கு தமிழகத்தின் பங்கு பெரும் அளவில் இருப்பதை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை.
தொலைநோக்கு சிந்தனையுடன் விளையாட்டுத் துறையில் நம் நாடும் குறிப்பாக தமிழகமும் சாதனை படைக்கும் விதமாக பொறியியல் கல்லூரிகளில் விளையாட்டு வீரர்களுக்கு 500 இடங்களை ஒதுக்கி அறிவித்திருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும், மாணவர்கள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications