எமனாகும் அரசு பேருந்துகள்: தினசரி பேருந்து மோதி 4 பேர் மரணம்

தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்திற்கு 21,207 பேருந்துகள் உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை ஆகிய 7 பிரிவாக பிரிக்கப்பட்டு அரசு போக்கு வரத்து கழகங்கள் செயல் படுகின்றன.
இதில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மட்டும் 3,500 பேருந்துகளை இயக்கி வருகிறது. பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவருவதற்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விபத்தும் அதிகமாகி உயிர் இழப்பும் பெருகி வருகிறது.
கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் மாநில போக்குவரத்து கழக பேருந்து மூலம் ஏற்பட்ட விபத்தால் உயிர் இழந்தவர்களில் தமிழகத்தில்தான் அதிகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் 1,317 பேர் அரசு பஸ் விபத்தில் சிக்கி உயிர் இழந்துள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 4 பேர் பலியாவதாக தேசிய குற்றவியல் பதிவு மையத்தின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நாடு முழுவதும் 12,386 அரசு பேருந்துகள் மூலம் விபத்து ஏற்பட்டுள்ளது. தனியார் பேருந்து விபத்து 999 ஆக பதிவாகி உள்ளது. தமிழகத்திற்கு அடுத்ததாக ஆந்திர மாநில போக்குவரத்து கழக பேருந்து விபத்தில் 704 பேர் உயிர் இழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் தினமும் அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சமாக உள்ளது. அரசு பேருந்துகள் தினமும் 88 லட்சத்து 50 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்படுகிறது. அனைத்து மாநிங்களிலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதிக அளவிலான பேருந்து விபத்திற்கு டிரைவர்கள் மன அழுத்தமும் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையே காரணம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகின்றனர். டிரைவர் - கண்டக்டர், தொழில் நுட்ப பணியாளர்கள் போதுமான அனைத்து அரசு போக்கு வரத்து கழகங்களில் இல்லை. அதனால் பராமரிப்பு இல்லாமல் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மட்டும் கடந்த 10 வருடத்தில் 43 ஊழியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் பஸ்களின் எண்ணிக்கை 192-ல் இருந்து 868 ஆக உயர்ந்துள்ளது. அதே பிரச்சினைதான் சென்னை மாநகர போக்கு வரத்து கழகத்திலும் நிலவுகிறது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு 150 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்று சி.ஐ.டி.யு. தொழிலாளர் யூனியன் தலைவர் சந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications