ஓசூரில் பெரியார் தி.க. பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு, தலையை வெட்டி கொலை- சிபிஐ எம்எல்ஏ மீது வழக்கு
ஓசூர்: ஓசூர் அருகே பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் துப்பாக்கியால் சுட்டும், தலையை துண்டித்தும் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ராயக்கோட்டை செல்லும் வழியில் உத்தனப்பள்ளி அருகே உள்ளது அயர்னப்பள்ளி ஊராட்சி. இங்குள்ள பாலேகுளத்தை சேர்ந்த பழனி என்ற பழனிச்சாமி, கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.
வழக்கம் போல காலையில் தமது மகனுடன் தோட்ட வேலைக்குச் சென்ற பழனியை 20 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தது. முதலில் துப்பாக்கியால் சுட்டது. இதில் படுகாயங்களுடன் தப்பி ஓடிய பழனிச்சாமி சிறிது தொலைவில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அப்போது அந்த கும்பல் வீச்சரிவாளால் பழனிசாமியை சரமாரியாக வெட்டியதுடன் தலையை தனியாக துண்டித்து வயலில் வீசினர். இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
கொலையுண்ட பழனிசாமி தளி ஒன்றிய தி.மு.க. தலைவர் வெங்கடேசன் படுகொலை வழக்கு உள்பட மேலும் பல வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார். ஆரம்பத்தில் நக்சலைட் இயக்கத்தில் இருந்தவர் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கோயில் வழிபாடு தொடர்பாக பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும் அப்பகுதி கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வந்த நிலையில் இக்கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.
இக்கொலை தொடர்பாக தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், அவரது சகோதரர் உள்ளிட்ட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications