விவசாயத்திற்கு தனி பட்ஜெட்: கோவை டு சென்னை விழிப்புணர்வு பிரச்சாரம்-நல்லசாமி
கோவை: விவசாயத்திற்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்ய கோரி கோவையில் இருந்து சென்னைக்கு விழிப்புணர்வு பிரசாரப் பயணம் நடைபெறும் என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அறிவித்துள்ளார்.
கோவையில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அதன் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மூத்த தலைவர் துரை, விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்தியாவில் பெட்ரோலியம் இறக்குமதி மூலம் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி அந்நிய செலவாணி இழப்பு ஏற்படுகிறது. பெட்ரோலுக்குப் பதிலாக எத்தனாலை பயன்படுத்தினால் இந்தியா தன்னிறைவு பெறும். எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தினால் தான் இந்தியா வல்லரசாக முடியும்.
உலக அளவில் தமிழகத்தை தவிர வேறு எங்கும் கள் விற்பனை செய்யத் தடையில்லை. எனவே தமிழகத்திலும் கள் விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். இந்தியாவில் இருந்து வேளாண் விளை பொருட்களை ஏற்றுமதி செய்து அதன் மூலம் அன்னிய செலவாணி ஈட்டுவதே சிறந்தது.
ஆனால் இதற்கு மாறாக இந்தியாவில் தாராளமாக விளைய கூடிய அரிசி, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணை மற்றும் பருப்பு வகைகளை தொடர்ந்து அரசு இறக்குமதி செய்து வருகின்றது. இது தேசிய அவமானமாகும்.
இந்திய அரசும், தமிழக அரசும் விவசாயத்திற்கு மிகக் குறைந்த அளவே நிதியை ஒதுக்கீடு செய்கிறது. எனவே நாட்டில் வேளாண்மையை மேம்படுத்த வகையில் விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.
கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் பல லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக்குழு தெரிவித்துள்ளது. எனவே விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 21ம் தேதி கோவையில் இருந்து சென்னைக்கு விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள உள்ளோம். சென்னையில் இருந்து டெல்லி சென்று பிரதமர், ஜனாதிபதி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்து மனு கொடுக்கப்படும். இதற்கான தேதி பின்பு அறிவிக்கப்படும் என்றார்.