திருவள்ளூர் அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள மான் கொம்புகள் பறிமுதல்-2 பேர் கைது
திருவள்ளூர்: திருவள்ளூரில் ஒரு குடோனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள மான் கொம்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நிறுவன உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூரை அடுத்த ராஜாஜிபுரம் வி.ஜி.பி. நகரில் வசித்தவர் சுப்பிரமணியம். இவர் கடந்த 1990ம் ஆண்டு முதல் அரண்வாயல் பகுதியில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இங்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் போன்ற மாநில வனத்துறையின் அனுமதியுடன் மான் கொம்புகளை கொள்முதல் செய்கிறார்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனுமதி பெற்று மான்கொம்புகள் மூலம் கத்திபிடி, நடைகொம்பு பிடி போன்ற பொருட்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டு முதல், மான்கொம்பு ஏற்றுமதியை மத்திய, மாநில அரசுகள் தடை செய்தது. ஆனால் சுப்பிரமணியம் தனது உரிமைத்தை புதுப்பிக்காமல், தொடர்ந்து மான் கொம்புகளை பதுக்கி வைத்திருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணப்பன் அறிவுறுத்தலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ரூபேஷ்குமார் மீனா, துணை சூப்பிரண்டு பாலச்சந்திரன், செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் அரண்வாயலில் உள்ள சுப்ரமணியத்தின் குடோனில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 20 டன் எடை கொண்ட ரூ.2 கோடி மதிப்புள்ள மான்கொம்புகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குடோன் உரிமையாளர் சுப்பிரமணியம், மேலாளர் கோதண்டம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.