அமைச்சர் கார் மறிப்பு: பாமக அலுவலகத்தை சூறையாடிய அதிமுகவினர்- திண்டிவனத்தில் பதட்டம்
திண்டிவனம்: திண்டிவனம் அருகே அதிமுக மற்றும் பாமகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
திண்டிவனம் அருகே உள்ளது காவேரிப்பாக்கம். அங்கு நேற்றிரவு நகராட்சி பள்ளி வளாகத்தில் அமர்ந்து அதிமுகவினர் சிலர் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதனை பாமகவைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் ஜெயராஜ் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து இரு தரப்பும் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தன. இந்த நிலையில் ஜெயராஜை மட்டும் போலீசார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
அப்போது ஜெயராஜ் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் சாலைமறியலில ஈடுபட்டனர்.
இதற்கிடையே திண்டிவனத்தில் இருந்து சென்னை புறப்பட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் காரை பாமகவினர் வழிமறித்ததாகத் தகவல் பரவியது. இதையடுத்து அங்கிருந்த பாமக அலுவலகத்தை அதிமுகவினர் சூறையாடினர். உடனே அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் திண்டிவனத்தில் பதற்றம் நிலவி வருகின்றது.