கர்நாடக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெகதீஷ் ஷெட்டர்- சதானந்த கவுடா ராஜினாமா செய்ய ஒப்புதல்!

கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சதானந்த கவுடாவை மாற்றுவது என்று பாஜக மேலிடம் முடிவெடுத்தது. இதைத் தொடர்ந்து ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்கவும் தீர்மானித்தது. இதற்காக இன்று காலை பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் திட்டமிட்டபடி கூட்டம் காலையில் நடைபெறவில்லை. முதல்வர் பொறுப்பில் இருந்து தாம் முறைப்படி விலகுவதற்கு 3 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சதானந்த கவுடா தரப்பு அதிரடியாக கெடு வைத்தது. வேறுவழியில்லாமல் இந்த நிபந்தனைகளைப் பற்றி ஆலோசனை நடத்த வேண்டிய நிலைமை பாஜக மேலிடத்துக்கு ஏற்பட்டது. அதாவது சதானந்த கவுடாவுக்கு மாநில பாஜக தலைவர் பதவி, அவரது ஆதரவாளருக்கு துணை முதல்வர் பதவி, அமைச்சரவையில் தமது ஆதரவாளர்களுக்கு சரிபாதி ஒதுக்கீடு என்பதுதான் சதானந்த கவுடாவின் நிபந்தனை.
இந்த நிபந்தனைகளை ஏற்பதாக பாஜக மேலிடம் ஒப்புக் கொண்டதையடுத்து மாலை 3 மணியளவில் எம்.எல்.ஏக்கள் நடைபெற்றது. கூட்டத்தில் ஜெகதீஷ் ஷெட்டர், மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தற்போதைய பாஜக மாநில தலைவரான ஈஸவரப்பாவுக்கு துணை முதல்வர் பதவியை கொடுப்பது என்றும் சதானந்த கவுடாவை மாநில பாஜக தலைவராக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு எதியூரப்பா சுரங்க முறைகேட்டில் சிக்கி சிறைக்குப் போய்விட்டு வந்த பிறகு தொடங்கிய பாஜகவின் உட்கட்சிப் பூசல் ஓராண்டு கழித்து முடிவுக்கு வந்துள்ளது அந்த கட்சி தொண்டர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.












Click it and Unblock the Notifications