பெருந்துறையில் ஓடும் பேருந்தில் தீ: 60 பயணிகள் உயிர் தப்பினர்
ஈரோடு: ஈரோட்டில் இருந்து பழனிக்கு புறப்பட்ட தனியார் பேருந்து பெருந்துறையில் சென்று கொண்டிருந்தபோது திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. இதில் பேருந்தில் இருந்த 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 60 பயணிகளுடன் ஈரோட்டில் இருந்து பழனிக்கு புறப்பட்டது. அந்த பேருந்து காலை 9.30 மணி அளவில் பெருந்துறை அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருக்கையில் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. உடனே டிரைவர் பேருந்தை ஓரமாக நிறுத்திவி்ட்டு பேனட்டை திறந்து பார்த்தபோது என்ஜினின் அடிப்பகுதி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்த பயணிகள் அவசர, அவசரமாக பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். டிரைவர் உரிய நேரத்தில் பேருந்தை நிறுத்தி கவனித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.












Click it and Unblock the Notifications