அம்மா சொல்லித்தான் சிறுமியை சிறுநீர் குடிக்க வைத்தேன்: வார்டன்

மேற்கு வங்க மாநிலம் சாந்தி நிகேத்தனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான பதா பவன் பள்ளியில் 5ம் வகுப்பு படித்த மாணவி புனிதா மிஸ்ட்ரி(10). ஹாஸ்டலில் தங்கிப் படித்த புனிதா படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அவரது சிறுநீரை அவரையே குடிக்க வைத்துள்ளார் வார்டன் உமா போட்டர். இதையடுத்து வார்டன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பிரதமர் அலுவலகத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை சமர்பித்துள்ள இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுவதாவது,
புனிதாவின் தாய் தனது மகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை குறித்து ஹாஸ்டல் வார்டன் உமாவுடன் பேசியுள்ளார். இனியும் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருக்கச் செய்வதற்காக ஒரு முறை சிறுமியை அவரது சிறுநீரைக் குடிக்க வைக்குமாறு புனிதாவின் தாய் தான் வார்டன் உமாவிடம் கூறியுள்ளார். அவர் சொன்னபடி தான் வார்டன் சிறுமியை சிறுநீரைக் குடிக்க வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆனால் இறுதி அறிக்கை வரும் வரை எதையும் கூற முடியாது என்று அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே வார்டனிடம் தான் அவ்வாறு கூறவேயில்லை என்று புனிதாவின் தாய் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஸ்வபாரதி பல்கலைக்கழக பதிவாளர் மணிமுகுத் மித்ரா, பதா பவன் தலைமை ஆசிரியை போதிரூபா சின்ஹா மற்றும் ஒரு ஆசிரியை ஆகியோர் சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரை மீண்டும் பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்ததாக சிறுமியின் தாய் மேலும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications