வட்டிக்கு பணம் வாங்கிய மார்வாடியை வெட்டி கொலை செய்த 4 பேருக்கு வலைவீச்சு
சென்னை: சென்னையில் வட்டிக்கு பணம் வாங்கிய ரமேஷ் என்ற மார்வாடியை, வெட்டி கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணா நகர் மேற்கு 6வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ்(38). மார்வாடியான இவர், கிண்டி ரோஸ்கோர்ஸில் நடைபெறும் குதிரைப் பந்தயத்தில் பணம் கட்டி, லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.
குதிரை பந்தியத்தில் பணம் கட்டும் நபர்களுக்கு கந்துவட்டிக்கு பணம் கொடுப்பதற்காக, ரேஸ்கோர்ஸ பகுதியில் சில அரசியல் பிரமுகர்கள் ஆட்களை வைத்துள்ளனர். அவர்களிடம் கடன் பெற்ற ரமேஷ், அதை திரும்ப செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் வடபழனியை சேர்ந்த கார் புரோக்கரான ஆறுமுகம் என்பவரிடம், ரமேஷ் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் நேற்று ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் ரமேஷை சந்தித்த ஆறுமுகம் தனக்கு ரூ.45 ஆயிரம் பணம் தர வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ரமேஷை அதை மறுத்து கெட்ட வார்த்தைகளால் ஆறுமுகத்தை திட்டியுள்ளார்.
அதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து ரமேஷை கையில் இருந்த ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த ரமேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் நடைபெற்ற போது, கார் நிறுத்த பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் இருந்ததால், ஆறுமுகமும் அவரது கூட்டாளிகளும் காரில் தப்பியோடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து கிண்டி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, ரமேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கொலை செய்யப்பட்ட ரமேஷின் தாயார் கூறியதாவது,
நேற்று மதியம் 12 மணியளவில் நெல்லையை சேர்ந்த ஒருவரிடம் ரூ.10 லட்சம் வட்டி பணம் வாங்க வேண்டும் என்று கூறிய ரமேஷ், கிண்டிக்கு சென்றான். மாலை 6.30 மணிக்கு ரமேஷின் செல்போன் நம்பருக்கு அழைத்த போது, சுவிட் ஆப் என்று வந்தது. அவருடன் சென்ற நண்பர் ரவியை அழைத்து கேட்ட போது, ரமேசை ரவுடிகள் வெட்டி கொலை செய்யப்பட்டதாக கூறினார் என்றார்.
ரமேஷ், ஆறுமுகம் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போதே, இது குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அப்போது ரோந்து போலீசார் அங்கு வந்து விசாரித்த போது, அங்கு நின்ற சில அரசியல்வாதிகள், நாங்கள் தான் இங்கே பேசி கொண்டிருந்தோம். இங்கே பிரச்சனை எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து போலீசார் சென்றுவிட்டனர். அதன்பிறகே வாக்குவாதம் முற்றி, ரமேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து ஆறுமுகம் மற்றும் அவரது 3 கூட்டாளிகளை தேடி வருகின்றனர். கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications