குற்றாலம் படகு குழாமில் படகு இயக்கம் தொடங்கியது: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
குற்றாலத்தில் சீசன் துவங்கினாலும் தொடர்ந்து சாரல் மழை ஏமாற்றி வருகிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைந்து காணப்படுகிறது. குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக ஐந்தருவி வெண்ணமடை குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் படகு சவாரி நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு சீசன் காலதாமதமாக துவங்கியதாலும், படகு குழாமிற்கு போதிய தண்ணீர் வராததாலும் படகு சவாரி துவக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த சாரல் மழை காரணமாக ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் படகு குழாமிற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. படகு குழாமில் ஓரளவு தண்ணீர் வந்துள்ளதால் படகு சவாரி துவக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து இன்று காலை படகு போக்குவரத்து துவங்கப்பட்டது.
பேரூராட்சி தலைவர் லதா படகு சவாரியைத் தொடங்கி வைத்தார். தனிப் படகு கட்டணமாக 50 ரூபாயும், 2 இருக்கை படகிற்கு 75 ரூபாயும், 4 இருக்கை படகிற்கு 100 ரூபாயும், துடுப்பு படகிற்கு 120 ரூபாயும் வசூலிக்கப்படும். இக்கட்டணம் அரை மணி நேரத்திற்கு மட்டுமே. படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு உயிர் காக்கும் உடை (லைப் ஜாக்கெட்) வழங்கப்படும். இதற்கு தனி கட்டணம் கிடையாது.