பாபநாசத்தில் சுற்றுலா பயணிகளிடம் மதுபாட்டில்கள் பறிமுதல்: ரூ.10,000 அபராதம்
நெல்லை: வனத்துறை கண்காணிப்பையும் மீறி சுற்றுலாப் பயணிகள் பாபநாசம் மலைப்பகுதிக்கு கொண்டு சென்ற நூறறுக்கணக்கான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாபநாசம் மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். தற்போது குற்றால சீசனும் தொடங்கிவிட்டதால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அகஸ்தியர் அருவிக்கும் வருகின்றனர். இதனால் கூட்டம் அங்கும் அலை மோதுகிறது. அகஸ்தியர் அருவிக்கு மதுபாட்டில்கள் கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
வனப்பகுதியில் மது அருந்துவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் மதுபாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் சிலர் பிரியாணி, சாதம் போன்ற உணவுகளில் மறைத்து வைத்தும், பெட்ரோல், டீசல் என்று கூறி தண்ணீர் பாட்டில்களிலும் மதுபானங்களை எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு நூதனமாக கடத்தும் மதுபாட்டில்களையும் வனத்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்து உடைத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முண்டந்துறை புலிகள் காப்பாக இணை இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவுப்படி பாபநாசம் வனச்சரகர் சுப்புராவ் மற்றும் வன ஊழியர்கள் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை சோதனை செய்தனர்.
அந்த சோதனையின்போது ஏராளமான மதுபாட்டில்கள் சிக்கின. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து உடைத்தனர். மேலும் மதுபாட்டில்களை கொண்டு வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். நேற்று ஒருநாள் மட்டும் சுமார் ரூ.10,000க்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.