கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகளுக்கு நாளை மகாமக குளத்தில் மோட்ச தீபம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா தொடக்க பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள். 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
இறந்த குழந்தைகளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16- ந் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.அதன்படி திங்கட்கிழமை (16- ந்தேதி) 8-வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதையொட்டி பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் குழந்தைகளுக்கு பிடித்த தின்பண்டங்களை அவர்களின் படத்திற்கு முன் படையலிட்டு அஞ்சலி செலுத்துகின்றனர். திங்கட்கிழமை காலை 7 மணிக்கு அமிர்தா நகரில் ,குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் கட்டிய அமிர்த விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. பின்னர் காலை 8 மணிக்கு கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளி முன்பு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர், பள்ளி - கல்லூரி மாணவ-மாணவிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
பின்னர் காலை 10.30 மணிக்கு கும்பகோணம் பாலக்கரையில் நினைவு மண்டபத்தில் ,குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
மாலை 5 மணிக்கு ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் இருந்து, 94 குழந்தைகளின் பெற்றோர், 94 அகல் விளக்கு தீபங்களை ஊர்வலமாக எடுத்து செல்கின்றனர். பின்னர் கும்பகோணம் மகாமக குளத்தில் 94 குழந்தைகளின் பெற்றோர் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களோடு பொதுமக்கள் பலரும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications