தமிழகத்தில் இன்று மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை: வெப்ப சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று லேசானது முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை பெய்து வருவதை தொடர்ந்து, தமிழகத்தில் நிலவி வந்த கோடை வெப்பம் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக நேற்று சென்னை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. இதையடுத்து கோடை வெப்பத்தில் அவதிப்பட்டு வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நேற்று மழை பெய்தது. இதில் அதிகப்பட்சமாக வாழப்பாடி, ஏற்காடு பகுதிகளில் 8 செ.மீ மழையும், பரமத்தி வேலூரில் 7 செ.மீ மழையும், சாத்தனூர் அணை, மேலாத்தூர், விழுப்புரம், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழையும் பெய்தது.
பள்ளிப்பட்டு, உளுந்தூர்பேட்டை, வென்பானூர் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பெய்தது. சேலம், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, விருத்தாசலம், ஆரணி, திருபுவனம், திருகோவிலூர், மாதவரம், கள்ளக்குறிச்சி, ஸ்ரீபெரும்புதூர், ஆம்பூர், தேவக்கோட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவானது.
சென்னை விமான நிலையம், செங்குன்றம், தர்மபுரி ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ மழையும், சென்னை, காஞ்சிபுரம், பெரம்பலூர், செய்யாறு, குளித்தலை, நெய்வேலி போன்ற இடங்களில் 1 செ.மீ மழையும் பெய்தது.
இன்றும் மழை:
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் பலத்த மழை பெய்ய கூடும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications