தமிழகத்தில் பரவலாக நல்ல மழை... மேலும் சில நாள் நீடிக்கும்
சென்னை: தமிழகத்தில் பரவலாக பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் நல்ல செய்தியைத் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனமே இந்த மழைக்குக் காரணம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு தென் மேற்குப் பருவ மழை பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. வெப்பச் சலனத்தால் இந்த மழை பெய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் அதிகாலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மேக மூட்டமாக காணப்படுகிறது. நகரின் சில பகுதிகளில் காலையில் லேசான மழை பெய்தது.
இன்றும் காலை முதலே மேக மூட்டமாக உள்ளது. பிற்பகலுக்கு மேல் மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை நீடித்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
வெப்பச் சலன மழை காரணமாக தமிழகத்தில் வெப்ப நிலை வெகுவாக குறைந்துள்ளது. குளுமையான சூழல் காணப்படுகிறது. இந்த மழை மேலும் சில நாட்கள் நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications