வறட்சியில் மாநிலம்.. வாஸ்துப்படி அலுவலகங்களை மாற்றியமைப்பதில் கர்நாடக அமைச்சர்கள் மும்முரம்
பெங்களூர்: கர்நாடக மாநில புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் அனைவருமே தங்களது அலுவலகங்களை வாஸ்து பார்த்து மாற்றியமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால் வாஸ்து வல்லுநர்கள் மற்றும் ஜோதிடர்கள் காட்டில் செமமழையாம்!
ஜெகதீஷ் ஷெட்டரைப் பொறுத்தவரை அவர் தம்மை நாத்திகர் என்றுதான் கூறிக் கொள்வார். ஆனால் அவரது அலுவலகத்துக்கு வந்த அவரது மனைவி ஷில்பா வாஸ்து அடிப்படையில் சில மாற்றங்களை செய்ததுடன் சண்டிக ஹோமமும் நடத்தியிருக்கிறாராம். முதலமைச்சரின் மேஜை கிழக்கு மேற்காக போடப்பட்டிருந்தது. இதை வாஸ்துப்படி வடக்கு தெற்காக மாற்றி வைத்திருக்கின்றனர். இதனால் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் நிறைய வெற்றிடம் இருக்கிறதாம்.
இதேபோல் சுற்றுச் சூழல் அமைச்சர் சொகுடு சிவன்னா, உள்கட்டமைப்புத் துறை அமைச்சர் சுனில் ஆகியோரது அலுவலகங்களில் கழிப்பறையைநோக்கி மேஜைகள் போடப்பட்டிருந்தன. இது இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இளைஞர் நலத்துறை அமைச்சர் அப்பச்சு ரஞ்சன், பேரவை வளாகமான விதான் செளதாவை ஒட்டி அமைந்திருக்கும் விகாஷா செளதாவில் தமக்கு அலுவலகம் கேட்டு வாங்கியிருக்கிறார்.
இத்தோடு முடிந்துபோய்விட்டது என நினைக்கிறீர்களா? பல அமைச்சர்கள் தங்களது வாகன எண்ணின் கூட்டுத் தொகையை 9 ஆக வருமாறு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதுதான் லக்கி நம்பராம்!
கர்நாடகத்தில் வறட்சிதான் முதல் பிரச்சனை என்கிறார்கள்.. ஆனால் அமைச்சர்களுக்கோ வாஸ்து ஜூரம்தான் முதல் விவகாரமாக இருக்கிறது!












Click it and Unblock the Notifications