ஏமாற்றும் மழை: பாபநாசம் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதற்கிடையே ஆடி அமாவாசையை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் வறண்டு காணப்படுகின்றன. நெல்லை மாவட்டத்தில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய கார் சாகுபடி தண்ணீர் இல்லாததால் ஏமாற்றம் அளித்துள்ளது. விவசாய தேவைக்கு தண்ணீர் இல்லாத நிலையில் அணையில் உள்ள தண்ணீரை வைத்து குடிநீர் பற்றாக்குறையை பொதுபணி்த்துறை சமாளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு ஓரளவு தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து தொடங்கியது.
தற்போது அணை பகுதியில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. பாபநாசம் அணையில் 41.80 அடியாக இருந்த நீர்மட்டம் 41.45 அடியாகக் குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 365 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழை கண்ணாமூச்சி ஆடுவதால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்து வருகிறது.